Tuesday, April 20, 2010

மனசாட்சி!

அவன்!
நான்!

அவனும் நானும் ஒன்றல்ல..
நானும் அவனும் ஒன்று!
நாங்கள் எங்கு சென்றாலும்
ஒன்றாகவே செல்வோம்...
நான் ஒரு வழியில்
அவன் ஒரு வழியில்..

அவன் சொல்வதை
நான் பல சமயங்களில்
கேட்பது இல்லை..ஏனெனில்
அவன் நல்லதை மட்டுமே சொல்கிறான்..
நானும் நல்லவன் தான்
என்ன? நடைமுறை வாழ்க்கை
என்னை சிலசமயம் கெட்டவனாக்கி விடுகிறது..

அவன் அனைவரையும்
அன்புடன் பார் என்கிறான்..
ஆனால் என்னால்
பொறாமையாக தான்
பார்க்க முடிகிறது...

சில இடங்களில்
நான் கடகடவென பேசி முடிக்கிறேன்..
அவன் அமைதியாக ...

சில இடங்களில்
அவன் பேச நினைக்கிறான்
நான் அமைதியாக...

உரிமை இல்லாத
பொருட்களை அவன்
உரசுவது கூட கிடையாது..
நானோ உடன் எடுத்து கொள்கிறேன்..

இப்படிதான்
இருவரும் ஒன்றாக
ஆனால் எதிரெதிராக ..
ஏனோ சில சமயங்களில் மட்டும் ஒத்து போகிறோம்..

இதோ இருவருமே
இறந்துவிட்டோம்..

ஐயோ நான் நரகத்தில்..
ஆம் அதிகம் பாவம் செய்திருந்தேனே..

அவன்?
அட ,அவனும் நரகத்திலா ?
நம்ப முடியவில்லை...
அவன் தான் ஒரு பாவமும்
செய்திருக்க வில்லையே

பின்புதான்
புரிந்து கொண்டேன்...
இறைவன்
பாவ புண்ணியங்களை
மனிதனிடமிருந்து கணிகிறான்.
அவன் மனசாட்சியிடம் இருந்து அல்ல...

ஆம் நான் மனிதன் ..
அவன் என் மனசாட்சி..!

No comments: